Tuesday 29 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 8

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
..அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
..நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
..புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
..செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


ஆவாகி ஆவினில் ஐந்தும் ஆகி
..அறிவாகி அழலாகி அவியும் ஆகி
நாவாகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி
..நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகிப்
பூவாகிப் பூவுக்கு ஓர் நாற்றம் ஆகிப்
..புக்குளால் வாசமாய் நின்றான் ஆகித்
தேவாகித் தேவர் முதலுமாகிச்
..செழுஞ்சுடராய்ச் சென்று அடிகள் நின்றவாறே


செழுஞ்சுடராய் எங்கும் பரவும் சிவபெருமான் இவ்வாறெல்லாம் ஆனார்:


1. ஆ=பசு.
2. பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் - பஞ்சகவ்யம் என்று சொல்கிறோமே, சிவபெருமானுக்குப் பிரியமான யக்ஞங்களில் பயன்படும் வஸ்துக்கள். (பால், பாலிலிருந்து கிடைக்கும் தயிர், தயிரைக் கடைந்து கிடைக்கும் வெண்ணையை உருக்கிய பின் கிடைக்கும் நெய், சாணம், கோமயம்).
3. அறிவு
4. வேள்வித் தீ (அழல்)
5. ஆவி = அவிசு. வேள்வித்தீயில் இடப்படும் அன்னம்.
6. நல்லனவற்றைப் பேசும் நாக்கு
7. நாவினால் பேசப்படும் பேச்சு
8. நாதம் (நாதத்தின் உள்ளுறையும் நாதனாகவும்)
9. வேதத்தின் உட்பொருள்
10. பூ
11. பூவின் வாசனை
12. பூவையும் வாசனையையும் பிரிக்க முடியாது. அந்த ஒன்றிய நிலையாகவும் இருக்கிறார். (புக்குளால் வாசம்)
13. தேவாகி = தே + ஆகி = தே = தேவர்கள்
14. தேவர்களின் தலைவன்

No comments:

Post a Comment