Monday 28 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 7

மாதா பிதாவாகி மக்க ளாகி
..மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
..கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
..புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
..அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே


பதம் பிரித்து:


மாதா பிதாவாகி மக்களாகி
..மறிகடலும் மால்விசும்பும் தானேயாகிக்
கோதாவிரியாய்க் குமரியாகிக்
..கொல்புலித் தோல் ஆடைக் குழகனாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
..புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி
யாதானும் என நினைந்தார்க்கு எளிதேயாகி
..அழல் வண்ண வண்ணர் தாம் நின்றவாறே


அழல் = நெருப்பு
நெருப்பின் வண்ணமுடைய சிவபெருமான்,


1. அன்னை, தந்தை, குழந்தைகளாகவும்,
2. ஒலி எழுப்பும் கடல், ஒலிவடிவமான ஆகாயம்
3. கோதாவிரி, குமரி முதலிய புனித நீர்நிலைகள் ஆகவும்
4. எதிரியைக் கொல்லும் வலிமையுடைய புலியினது தோலை ஆடையாய் அணியும், தோடுடைய செவியன் (குழகு = தோடு)
5. போதாய மலர் = உரிய காலத்தில் பூத்த மலர். அம்மலர்களால் அருச்சித்து வணங்குவோரின் பிறப்பறுக்கும் தூயவன்
6. 'எது நடந்தாலும் நடக்கட்டும். ஈசன் இருக்கிறார்' என்று நினைத்து இருப்போர்க்கு எளிதில் வந்து உதவும் பெருமான்


இவ்வாறெல்லாம் ஆகி நின்றார்.

No comments:

Post a Comment