Wednesday, 23 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
..கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
..குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
..நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
..யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே

பதம் பிரித்து:

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
..கனவாகி நனவாகிக் கங்குலாகிக்
கூற்றாகிக் கூற்று உதைத்த கொல் களிறும் ஆகிக்
..குரைகடலாய்க் குரை கடற்கு ஓர் கோமானுமாய்
நீற்றானாய் நீறு ஏற்ற மேனியாகி
..நீள்விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி
ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி
..எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே

மேலே எழும்பும் சுடரான எம் அடிகள், சிவபெருமான்,

1. காற்று, மழை பொழியும் மேகம் ஆனார்
2. இறந்த, நிகழ், எதிர் என்று மூன்று காலம் ஆனார்
3. கனவு (ஸ்வப்னம்), நனவு (ஜாக்ரிதி) ஆகிய நிலைகள் ஆனார்
4. கங்குல் = இரவு. இரவானார்.
5. கூற்று = முடிவு இந்த இடத்தில். யாவும் சிவனிடமே முடிகின்றன.

இதில் இரவு, பின் முடிவு என்று அழகாக அப்பர் பெருமான் வடித்துள்ளார். இரவு = பிரளயம். முடிவு = பிரளயத்திற்குப் பின் ஒடுங்குதல்.

6. கூற்றுதைத்த - யமனை உதைத்த களிறு ஒத்த வீரன் ஆனார்
7. ஒலிக்கும் கடலாகவும், அந்தக் கடலின் தலைவன் - வருணனாகவும் ஆனார்
8. திருநீறு அணிந்தவனாகவும், அந்த நீற்றை அணிவதற்கு ஏற்ற மேனியனாகவும் ஆனார்.
9. பெரிய நீண்ட ஆகயமாகியும், அந்த ஆகாயத்தின் உச்சியாகவும் ஆனார்
10. அனைத்தையும் எற்பவனானார்
11. இடபத்தின் மேல் ஏறி ஊர்பவரும் ஆனார்.

No comments:

Post a Comment