Wednesday 23 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
..வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
..கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
..பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
..யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே

பதம் பிரித்து:

மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி
..வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகி
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியும் ஆகிக்
..கலையாகிக் கலைஞானம் தானே ஆகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகிப்
..பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி
எண்ணாகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி
..எழும் சுடராய் எம் அடிகள் நின்றவாறே

சிவபெருமான்:

1. மண், விண், மலை
2. வைரம், மாணிக்கம் முதலிய நவரத்தினங்கள்
3. கண், கண்ணின் மணி
4. பெண், பெண்ணுக்கு ஏற்ற ஆண்
5. பிரளயத்தின் போது எல்லா இடமும் நீரில் மூழ்கிவிடும். அப்போது சிவபெருமான் தனித்து ஓரிடத்தில் இருப்பார். அந்த இடமும் இவரே. காலத்திற்கும் தேசத்திற்கும் அப்பாற்பட்டவர்.
6. எண்ணமாகவும், எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடிய வடிவம் - எழுத்து. அந்த எழுத்தும் அவரே.

இதைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு விஷயம் தோன்றுகிறது. இந்த ஐயம், சிறு வயதிலிருந்தே இருந்தது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற வாக்கியத்தில், எண் = numbers, எழுத்து = letters என்று கூறுவார்கள். சற்று விவாதித்தால், numbers ஐயும் நாம் எழுதுகிறோம். அதுவும் எழுத்துக்கள் தானே என்று கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க ஒரு வித பயம். இப்போது அந்த ஐயம் நீங்கிவிட்டது. நம் மனத்தில் தோன்றும் எண்ணம், அதனை எழுதும் வடிவம் ஆகியவை மிக முக்கியம் என்பதே அதன் பொருள்.

இன்னொரு வாதம். "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவார்". அப்போது எண் (numbers) அறிவித்தவன் என்று ஏன் சொல்வதில்லை என்று தோன்றியது. இப்போது அதற்கும் ஒரு நிறைவுப்புள்ளி. எழுத்து என்றாலே numbers மற்றும் letters என்று ஆகிவிட்டது அல்லவா?

No comments:

Post a Comment