Wednesday 23 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 1

உருத்திர தாண்டகம் - நின்ற திருத்தாண்டகம்

வேதத்தில் சிவபெருமானை அனைத்துமாய் வர்ணித்து வணங்கும் பகுதியை ஸ்ரீ ருத்திரம் என்று அழைப்பர்.

திருநாவுக்கரசு ஸ்வாமிகள், தனது தேவாரத்தில் (6 ஆம் திருமுறை, 94 ஆம் பதிகம்), நின்ற திருத்தாண்டகம் என்று ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகத்தில், சிவபெருமானை இவ்வாறெல்லாம் ஆகி நின்றவாறே என்று ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் பாடியிருப்பார். அதனால் நின்ற திருத்தாண்டகம் என்று பெயர் பெற்றது. மேலும் ஸ்ரீ ருத்ர வர்ணனை இருப்பதால், உருத்திர தாண்டகம் என்றும் பெயர் பெற்றது.

இந்தப் பதிகத்தைப் படிப்பதால் ஸ்ரீ ருத்ரத்தைப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.

இப்போதெல்லாம், நிறைய சர்ச்சைகள் வருகிறது. பெண்கள் வேதம் ஓதலாம், கூடாது என்றெல்லாம். ஒரு சிலர் வேதம் என்பது இறைவன் புகழைப் பாடுவதே. அதனால் யாவரும் சொல்லலாம் என்கிறார்கள்.

பல சான்றோர்களின் கருத்து, காயத்ரி மந்திர உபதேசம் ஆகாமல் வேதத்தை ஓதுதல் கூடாது. குறிப்பாக பெண்கள் அந்த மந்திரத்தைக் கூறுதல் ஆகாது. மருத்துவ ரீதியாக பல இன்னல்கள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். வேத மந்திரங்களை சில வகையான ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல வேண்டும். அவ்வாறு கூறும் போது, கர்பப் பையில் சில உபாதைகள் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை என்று நாம் எதற்கு சண்டைப் போட்டுக் காலத்தை வீணடிக்க வேண்டும்?

வேத மந்திர சாரமான திருமுறைகள், திருப்புகழ், அபிராமி அந்தாதி என்று பல தோத்திரங்கள் இருக்க, யாவரும் (உரிய உபதேசம் ஆனவர்கள், ஆகாதவர்கள்) அவற்றைத் துதித்து இறைவனை வழிபடலாமே.

திருமுறையே திருமறை என்பதை உணர்ந்து அதனை முடிந்தவரை கற்று மகிழ்வோம்.

இனிவரும் பதிவுகளில், உருத்திர தாண்டகத்தைப் பார்ப்போம்.

நமச்சிவாய வாழ்க!

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
..இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
..ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
..பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
..நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே

பதம் பிரித்து:

இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
..இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
..ஆகாசமாய் அட்டமூர்த்தி யாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
..பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி
..நிமிர் புன் சடை அடிகள் நின்ற வாறே

நிமிர்ந்த மென்மையான சடையை உடைய சிவபெருமான் நின்றவாறே இவ்வாறெல்லாம் ஆகிய லீலைகள் பெரும் வியப்பிற்குரியது:

1. நிலம், நீர், அனைத்தையும் வீசி எறியக் கூடிய காற்று, தீ, ஆகாசம் என்னும் ஐந்து பூதங்கள்.
2. திங்கள் (சந்திரன் - மனம்), ஞாயிறு (சூரியன் - புத்தி) மற்றும் நம் அஹங்காரம்/ஆன்மா என்னும் இயமானன் (தலைவன்/எஜமானன்)
இந்த 5 + 3 = 8 எட்டும் அட்ட மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
3. பெருமை தரும் நலம், சிறுமை தரும் குற்றம்
4. பெண், ஆண் எனும் இருபாலர்கள்
5. பிறர் உருவும் = மற்ற தேவர்கள்
6. தம் உருவும் = தமது மூவகை மேனிகள் - அருவம், உருவம், அருவுருவம்
7. நேற்று, இன்று, நாளை

இருநிலன் = பெரிய நிலம் - பூமி
இயமானன் = பெரியவன் / தலைவன்
நெருநல் = நேற்று

சிவபெருமான் அட்ட மூர்த்தியாய், நன்மை, தீமையாய், ஆண், பெண், மற்ற தேவராய், காலமாய் ஆனவர்.
வளரும்...

No comments:

Post a Comment